Pages

.

.

Saturday, January 14, 2017

வை.எல்.எஸ் ஹமீத் சிந்திப்பாரா?

(அபு றஷாத் )

நான் அ.இ.ம.காவின் தலைவர் அமைச்சர் றிஷாதின் ஆதரவாளனல்ல என்ற விடயத்தை முதலில் கூறிக்கொண்டு சில விடயங்களை வை.எல்.எஸ் ஹமீத் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

நாளை நீங்கள் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் நிகழ்ச்சிக்கு செல்லப்போவதாக அறிந்தேன்.அதனை அறிந்தவுடன் உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஏன் மனம் துடியாய் துடித்தது.நான் தனிப்பட்ட முறையில் உங்களை தொடர்பு கொண்டு இவற்றை சொன்னால் நீங்கள் கேட்பீரோ? இல்லையோ? அதனாலே ஊடகங்கள்  வாயிலாக இதனை கூறலாம் என நினைக்கின்றேன்.மின்னல் நிகழ்ச்சியானது முஸ்லிம்களுக்குள் குழப்பங்களை உண்டு பண்ணும் வகையில் செயற்படுகின்ற ஒரு நிகழ்ச்சியாகும்.இதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரங்கா பற்றி நான் கூறித் தான் நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை.சில காலங்களாக முஸ்லிம்கள் விடயத்தில் அமைதியாக இருந்தாலும் மீண்டும் தனது குரங்கு விளையாட்டுக்கு தயாராகின்றார்.

மின்னல் ரங்கா ஏதோ ஒரு உள் நோக்கோடு தான் உங்களை அழைத்திருப்பார்.வேறு என்ன செய்யப்போகிறார்? அமைச்சர் றிஷாத் தொடர்பான விடயங்களை உங்களிடமிருந்து கறந்து அவரின் எதிரிகளுக்கு தீனி போடப்போகிறார்.அண்மைக் கால உங்கள் செயற்பாடுகளை வைத்து பார்க்கும் போது நீங்களும் அவர் கிளறக் கிளற கொட்டித் தீர்ப்பீர்கள்.அதனால் உங்களுக்கு கிடைக்கப்போகும் இலாபம் என்ன? சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்.எதுவுமல்ல என்ற பதிலை பெறுவீர்கள்..

நீங்கள் கதைத்து விட்டு வெளிவர.மு.கா ஆதரவாளர்கள் உங்களது தீவிர  ஆதரவாளர்கள்   போன்று அள்ளிப்பிடித்துக் கொண்டு வருவார்கள் (இன்று உங்களுக்கு சார்பாக கதைப்போரது,நீங்கள் அ.இ.ம.காவில் இருந்த காலப்பகுதி பதிவுகளை பாருங்கள்.உங்களை எப்படி இகழ்ந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.).உங்களை அமைச்சர் றிஷாதினது  ஆதரவார்கள் துளைத்தெடுப்பார்கள்.எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முஸ்லிம் சமூகத்திடையே இது தான் பேச்சாக இருக்கும்.

இன்று எமது முஸ்லிம் சமூகம் மிகவும் இக்கட்டான  நிலையில் உள்ளது.எப்போது முஸ்லிம்களது உரிமைகளை பறிக்கலாமென துடித்துக்கொண்டிருக்கின்றனர்.இந் நிலையில் ஒரு வார காலம் முஸ்லிம்களின் கவனத்தை திசை திருப்புவது மிகவும் ஆபத்தானது.தற்போது வில்பத்து பிரச்சினையானது முஸ்லிம்களுக்கு சாதகாமான நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது.இதனால் அரசு மிகப் பெரும் அழுத்தத்திற்கும் உட்பட்டுள்ளது.இவ்வரசு இதனை திசை திருப்ப ரங்காவினூடாக இவ்வழியையும் கையாளலாம்.

தற்போது வடக்கு முஸ்லிம்கள் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளனர்.சரியோ பிழையோ அவர்களுக்கு அமைச்சர் றிஷாத் வேண்டும்.இந் நிலையில் அமைச்சர் றிஷாதை வீழ்த்துவது மிகவும் ஆபத்தானது.அல்லது அவர்களது பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர ஒரு வழியை கூறுங்கள் பார்க்கலாம்.வடக்கு முஸ்லிம்களின் மீது இத்தனை பெரிய இடி விழுந்தும் மு.காவினர்  விண்ணைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.இவர்களை இன்னும் நம்பலாமா?

இதனையெல்லாம் நான் கூறித் தான்  நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.நீங்கள்,நான் மேலே சுட்டிக் காட்டிய முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் சவால்கள் பற்றித் தான் அண்மைக் காலமாக பேசி வருகின்றீர்கள்.அந்த நாகரிக அரசியல் வழி முறையை தொடர்ந்தும் கடைப்பிடியுங்கள்.அதைத் தான் இன்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டும் உள்ளனர்.ரங்காவின் நரித்தனமான செயற்பாட்டில் நீங்கள் உங்களுக்கென்று மக்களிடையே தக்க வைத்துள்ள ஒரு நிலையான இடத்தை இழந்து விடாதீர்கள்.உங்கள் அரசியல் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்களை கூறியவனாய் நான் உங்களுடன் பகிர நினைத்த விடயங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துக்கொள்கிறேன்..

0 comments:

Post a Comment