Pages

.

.

Tuesday, May 23, 2017

இனவாதிகள் விடயத்தில் அரசை காப்பாற்ற முன்பு கூறிய உண்மையை மறுக்கும் ஹக்கீம்

21-05-2017ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் ஹக்கீம் காத்தான்குடி நூரானியா மையவாடி சுற்று மதிளினை கையளிக்கும் நிகழ்வில் இனவாதிகளின் இன்றைய செயற்பாடுகள் குறித்து பேசியிருந்தார். அவருடைய பேச்சில் முன்பு அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இவ்வாறான செயற்பாடுகள் நீடிக்க முடியாது என கூறிய அமைச்சர் ஹக்கீம் பின்பு இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சதியாக சுட்டிக் காட்டுகிறார்.

அவரது குறித்த  உரை (எவ்வித மாற்றமுமின்றி)

//////  “அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இருந்தால் இந்த எந்த விசயமும் நீடிக்க முடியாது என்பது மிகத் தெளிவான விசயம்.அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக உள்ளோம். ஆனால்,இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்று இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது இவர்களது பிரதான நோக்கம். இந்த கட்டத்திலே அதிலும் குறிப்பாக இந்த நாட்டின் போக்கிலே தங்களுக்கு சாதகமான விடயங்கள் நடக்கவில்லை என்பதற்கான சர்வதேச சக்திகள் இதன் பின்னால் இருப்பது நாங்கள் முழுமையாக ஒதுக்க முடியாத ஊகமாகும்.” //////

பொது பல சேனாவின் பிரச்சினை இவ்வரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கடந்த இரு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கின்றமை என்பது யாவரும் அறிந்ததே. தற்போது அது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. அமைச்சர் ஹக்கீமின் “அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் இருந்தால் இந்த எந்த விசயமும் நீடிக்க முடியாது என்பது மிகத் தெளிவான விடயம்” என்ற கூற்றானது இவ்விடயங்களின் பின்னால் இவ்வரசின் அனுசரணை இருப்பதை கூறுகிறது. நாம் இதனை இனவாதங்களின் பின்னால் இவ்வரசின் அனுசரணை உள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளாது போனாலும் இவ் விடயங்கள் நீடிப்பதன் காரணமாக,அமைச்சர் ஹக்கீமின் இக் கூற்றினூடாக இவ் இனவாதங்களின் பின்னால் இவ்வரசு உள்ளதா என்ற சந்தேகம் அமைச்சர் ஹக்கீமுக்கு இருப்பது தெளிவாகிறது.

அப்படி இருக்க, இது திட்டமிடப்பட்டு வேண்டுமென்று இந்த அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை இல்லாமல் செய்து ஒரு ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவது இவர்களது பிரதான நோக்கம் என அதன் பின்னர் கூறியிருப்பதானது இவ்வரசுக்கு எதிரான சக்திகளே இவ்விடயத்தை செய்கின்றன என கூறுகிறார். இது அவர் முன்பு குறிப்பிட்ட கூற்றுக்கு முற்று முழுதாக முரணானதல்லவா? இதனூடாக அவர் இவ்வரசை திருப்தி செய்ய முனைகிறார். *அமைச்சர் ஹக்கீமின் இவ்வாறான கூற்றுக்களை பார்க்கும் போது வரும் ஆனா வராது என்ற நகைச்சுவை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.*

மேலும்,இதன் பின்னால் சர்வதேச சக்திகள் இருப்பதாக கூறுகிறார்.இதைத் தானே அன்று மஹிந்தவின் காலத்திலும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்,அஸ்வர் ஆகியோர் கூறி முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஏச்சுகளை வாங்கிக்கட்டினார்கள்.முஸ்லிம்களின் தலை போகும் நிலையிலும் ஒரு புறத்தில் உண்மையையும் மறு புறத்தில் அவ் உண்மையை மறைத்து அரசாங்கத்தையும் காப்பாற்ற முனைகிறார்.குறித்த கூட்டத்தில் உரையாற்றிய பா.உ அலி சாகிர் மௌலான இவைகள் தொடர்ந்தாள் இவ்வரசாங்கத்தில் தொங்கி கொண்டிருக்க முடியாது என உரத்த தொனியில் பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

0 comments:

Post a Comment